நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது
காலை நேர சிந்தனை
( 20.04.2024)
நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது.
1. ஔவியம் பேசேல்:
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.
2. கண்டொன்று சொல்லேல்:
பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).
3. ஞயம்பட உரை:
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
4. வஞ்சகம் பேசேல்:
உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.
5. கோதாட்டு ஒழி:
கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.
6. சித்திரம் பேசேல்:
பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.
7. சுளிக்கச் சொல்லேல்:
கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.
8. சையெனத் திரியேல்:
பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.
9. சொற்சோர்வு படேல்:
பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.
10. தெய்வம் இகழேல்:
இறைவனை இகழ்ந்து பேசாதே.
11. நொய்ய உரையேல்:
அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.
12. பழிப்பன பகரேல்:
பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.
13. பிழைபடச் சொல்லேல்:
குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
14. மிகைபடச் சொல்லேல்:
சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.
15. மேன்மக்கள் சொற்கேள்:
நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.
16. மொழிவது அறமொழி:
சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் பேசு.
17. வல்லமை பேசேல்:
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.
18. வாதுமுற் கூறேல்:
பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.
19. வெட்டெனப் பேசேல்:
யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.
20. ஓரஞ் சொல்லேல்:
ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.
┈❀🌿🀼┈❀🌿
Comments
Post a Comment